முத்தலாக் தடை மசோதா விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து மங்கலம்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் மத நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கென்று பிரத்யேகமாக ஷரீஅத் சட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கணவன் - மனைவி மணமுறிவு விவகாரத்தில் "முத்தலாக்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி "முத்தலாக் தடை மசோதா' என்ற பெயரில், ஒரு மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கீழவீதி, மேலவீதி அனைத்து ஜமாஅத்தார்கள், அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஊடகப் பிரிவின் மாநிலத் துணைச் செயலர் ராஜ்குமார், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத் தலைவர் ஆபிருதீன், மாநில தமுமுக மார்க்க அணிச் செயலர் முஹம்மது அன்சாரி, இந்திய குடியரசு கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலர் மங்காப்பிள்ளை, எஸ்.டி.பி.ஐ., கட்சியின் நிர்வாகி சர்புதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர் சல்மான் பாரீஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்குரைஞர் குமரகுரு, நகர திமுக செயலர் செல்வம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருள்பிரகாசம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.