திருப்பாதிரிபுலியூர் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் ஸ்ரீ கோதை நாச்சியார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் திருப்பாவை சொற்பொழிவு நிறைவு பாசுரமும், அதனைத் தொடர்ந்து திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன. கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து, ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கும், ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, உற்சவர்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். வேதவிற்பனர்கள் வேதமந்திரங்களை முழங்க, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர்கள் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.