பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள், கரும்பு, மஞ்சள் கொத்துகளை வாங்குவதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் சனிக்கிழமை குவிந்தனர்.
தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப காய்கறிகளின் விலையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்களின் எண்ணத்துக்கு மாறாக குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன.
காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): கத்திரிக்காய் ரூ. 30, தக்காளி ரூ. 10, கரும்பு தரத்துக்கேற்ப ஒன்று ரூ. 15 முதல் ரூ. 25, மஞ்சள் கொத்து ரூ. 10 முதல் ரூ. 15, கேரட், பீன்ஸ், பீட்ரூட், சவ்சவ், உருளை ஆகியவற்றின் விலை கடந்த சில மாதங்களாக விற்று வந்ததை விட குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கடலூர் உழவர் சந்தையின் உதவி வேளாண்மை அலுவலர் எம்.தமிழ்ச்செல்வன் கூறியதாவது: கடலூர் உழவர் சந்தையில் சனிக்கிழமை விற்பனைக்காக 30 டன் காய்கறி, 10 டன் பழங்கள், மஞ்சள் கொத்து ஒன்றரை டன், கரும்பு 5 டன், சக்கரவள்ளிக் கிழங்கு ஒன்றரை டன், பரங்கிக்காய் 3 டன், வாழைப்பழம் 7 டன் விற்பனைக்காக குவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு பொருள்களின் விலை குறைவாக உள்ளது. இதனால், பொதுமக்கள் கூடுதலாக காய்கறிகள், பொருள்களை வாங்கிச் சென்றனர் என்றார் அவர்.