நெய்வேலி, குறிஞ்சிப்பாடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நெய்வேலி ஜவஹர் கலை - அறிவியல் கல்லூரியில் அனைத்துத் துறை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் சமத்துவ பொங்கலிட்டுக் கொண்டாடினர்.
கல்லூரியின் பொருளாளர் வீ.சந்திரசேகரன், ஜவஹர் கல்விக் கழகத்தின் செயலர் ஆர்.ரவிசந்திரன், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் செல்வன், கல்லூரிச் செயலர் விநாயகமூர்த்தி, துணைச் செயலர் மதிவாணன், ஜவஹர் பள்ளியின் துணைச் செயலர் ஞானசம்பந்தன், பள்ளி முதல்வர்கள் மதியசோதா, மருதாத்தாள், கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், மாணவ - மாணவிகளின் சிலம்பாட்டம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி, தப்பாட்டம், கோலப்போட்டி, உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல், கலை - அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், செயலர்
டி.ராஜாமணி, ஆலோசகர் ஏ.ஆசைத்தம்பி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆர்.மலர்ஒளி, கலை - அறிவியல் கல்லூரி முதல்வர் பி.கதிர்வேலு, துணை முதல்வர் கே.சிவசங்கரன், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபட்டனர்.
பண்ருட்டி சாரதா விதாலய மெட்ரிக். பள்ளி வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.