கண்டரக்கோட்டை முதல் வடலூர் வரை குண்டும் குழியுமாக உள்ள சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் வரையில் உள்ள 160 கி.மீ. தொலைவுள்ள விகேடி சாலையை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலையில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களும், கனரக வாகனங்களும் சென்று வருவதாலும், மழை நீர் தேங்ககியதாலும் சாலை முற்றிலுமாகச் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
மோசமான நிலையில் உள்ள இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, பயணிகள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.