கடலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் வட்டம் வாரியாக வருகிற 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் வருகிற 20-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டமானது வட்டம் தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி கடலூர் வட்டம் நாகப்பனூர், பண்ருட்டி வட்டம் பூண்டி, குறிஞ்சிப்பாடி வட்டம் மருவாய், சிதம்பரம் வட்டம் வசப்பத்தூர், காட்டுமன்னார்கோவில் வட்டம் உடையார்குடி, புவனகிரி வட்டம் வண்டுராயன்பட்டு, விருத்தாசலம் வட்டம் சித்தேரிக்குப்பம், திட்டக்குடி வட்டம் மதுரவல்லி, வேப்பூர் வட்டம் வேப்பூர், திருமுட்டம் வட்டம் நகரப்பாடி ஆகிய இடங்களில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மேற்கூறிய கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம், வயது திருத்தம், பொது விநியோகம் தொடர்பான இதர கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இந்தக் குறைபாடுகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். எனவே, இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.