நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் இரவு நேர மருத்துவரை நியமிக்க வேண்டுமென நுகர்வோர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
நெல்லிக்குப்பம் நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி விழிப்புணர்வு சங்கக் கூட்டம், சங்க அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
சங்கப் பொருளாளர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், புதிய செயலராக ரவிக்குமார், துணைச் செயலராக ஹசன்அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சங்கத் தலைவர் குமரவேல் பதவிப்பிரமாணம் செய்து
வைத்தார்.
கூட்டத்தில், நெல்லிக்குப்பம் சட்டப் பேரவைத் தொகுதி, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்ட பின்னர் நெல்லிக்குப்பம் நகராட்சி தனித்து விடப்பட்டதாகவே உள்ளது. எனவே, நெல்லிக்குப்பம் நகரை தனித் தாலுகாவாக மாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் இரவு நேர மருத்துவரை நியமிக்கவும், கழிப்பறை கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
சங்கத் துணைத் தலைவர் தென்னரசு நன்றி கூறினார்.