மின்னணு சீட்டு (இ-வே பில்) தொடர்பான பயிற்சி வகுப்பு பண்ருட்டியில் உள்ள வணிக வரி அலுவலக கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017-இன் கீழ் மின்னணு சீட்டு முறை வருகிற பிப்.1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருள்களை, 10 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள் மற்றும் வெளி மாநிலத்துக்கு கொண்டு செல்லும்போது மின் வழிச் சீட்டுடன் செல்ல வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், உதவி ஆணையர் (மாநில வரி) பண்ருட்டி நகரம் ச.செல்வகணபதி, மாநில வரி அலுவலர் (ஊரகம்) க.பாரி, மாநில வரி அலுவலர்கள் (செயலாக்கம்) வி.முருகன், எஸ்.வைதேகி, துணை மாநில வரி அலுவலர்கள் என்.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். மேலும், மின் வழிச் சீட்டை உருவாக்குதல் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, மின் வழிச் சீட்டு நடைமுறையானது சோதனை அடிப்படையில் ஜன.16-ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
பயிற்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டச் செயலர் வி.வீரப்பன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், வணிகர்கள், பட்டயக் கணக்கர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள், சரக்கு வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.