இறகுப் பந்துப் போட்டியில் வென்ற வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட அளவில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அருண்பிரசாத் நினைவாக இருவர் இறகுப் பந்துப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில், வடலூர் வள்ளலார் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் சுருதி, பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு 2-ஆம் இடத்தைப் பெற்றனர்.
போட்டியில் வென்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். வடலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.திருமுருகன் (பொறுப்பு) கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 3,500-ம், சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் இளங்கோ, உதவித் தலைமையாசிரியை பூர்ணிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் செந்தில்குமார் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் குணசேகர், பயிற்சியாளர் ராமமூர்த்தி, உடல் கல்வியாசிரியர் ஜெயராஜ், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.