பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
மாலை 4.30 மணியளவில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி தேவர் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது.
பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதைபோல மாவட்டத்தில் உள்ள மற்ற சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.