சிதம்பரம் நகரக் காவல் துறை சார்பில், திருட்டுக் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக வங்கி அதிகாரிகள், நகைக் கடை, வட்டிக் கடை உரிமாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அந்தக் காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிதம்பரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமை வகித்தார். குற்றத் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பாலசந்தர், சிதம்பரம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் காவல் ஆய்வாளர் குமார் பேசியதாவது: கடந்த சில நாள்களாக சிதம்பரம் நகர்ப் பகுதியில் வங்கிகள், வீடுகள், நகைக் கடைகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வங்கிகளில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்படுகிறது. எனவே, வங்கிகளில் வெளிப்புறப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும். கைரேகை டோக்கன் முறை, வாடிக்கையாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.
அதேபோல, பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மோட்டார் சைக்கிளில் மாட்டிக் கொண்டோ, கார் இருக்கைகளில் வைத்து எடுத்துச் செல்ல கூடாது. வங்கிக்கு வருபவர்கள் குறித்து பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண், கையொப்பம் உள்ளிட்ட தகவல்களை வாங்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களைப் பற்றி உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். நகை மதிப்பீட்டாளர்கள் நகைகளைத் தரம் பிரித்து, சோதித்து வாங்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், நகை, வட்டிக் கடை உரிமையாளர் கலந்து கொண்டனர்.