பண்ருட்டி அருகே சத்துணவு முட்டை சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை ஊராட்சியில் ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், புதுப்பேட்டை, பணப்பாக்கம், தொரப்பாடி, கோட்டலாம்பாக்கம், நத்தம், அம்மாபேட்டை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 290-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை மதியம் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டதாம். அதை உண்ட சிறிது நேரத்தில் 4-ஆம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, பல மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட லோகேஷ், ராகுல், சஞ்சய், சரவணன், கேசவன் உள்ளிட்ட 15 மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை முன் திரண்டனர். இதனால், அந்தப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
அழுகிய முட்டைகளைச் சாப்பிட்டதாலேயே மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.