சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவப் புல மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தை கடத்தல் தடுப்பு, சுற்றுப்புறத் தூய்மை, போதைப் பொருள் ஒழிப்பு, நெகிழி பயன்பாடு தவிர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணைவேந்தர் வே.முருகேசன் பங்கேற்று, நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில் மாணவ, மாணவிகள் தூய்மை இந்தியா இயக்கத்தில் பெருமளவில் பங்குபெற்று சுற்றுபுறத் தூய்மையை மேம்படுத்த வேண்டும் என்றும், நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி புல முதல்வர் டி.ராஜ்குமார், பல் மருத்துவக் கல்லூரி புல முதல்வர் கே.ராஜசிகாமணி, இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ். அய்யப்பராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி அமைப்பாளர் டி.கே.செந்தில்முருகன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் யு.வி.சண்முகம், திட்ட அலுவலர் டி.தாமரைச் செல்வி, பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், பல் மருத்துவத் துறை, செவிலியர் கல்லூரியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று மனிதச் சங்கிலியாக அணிவகுத்தனர்.