பண்ருட்டி அருகே பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியில் சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் புதுப்பேட்டை, பணப்பாக்கம், தொரப்பாடி, கோட்டலாம்பாக்கம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 290-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். புதன்கிழமை மதியம் மாணவர்களுக்கு
சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்களில் 15 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அழுகிய முட்டையை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில், ஒறையூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் சையது ஷாஜகான், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், சத்தியநாராயணன் ஆகியோர் புதுப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, முட்டைகளை சோதனையிட்டனர். உரிய பரிசோதனை செய்த பிறகே சத்துணவு, முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சத்துணவு அமைப்பாளரிடம் அறிவுறுத்தினர்.