அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, "தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய அஞ்சல் துறையால் வழங்கப்படும் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு மாணவர்கள், ரூ.200 மதிப்புள்ள அஞ்சல் தலை சேகரிப்போர் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
அல்லது பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். மேலும், மாணவரின் ஆண்டு தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இவர்கள் திருச்சி மண்டல அளவில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவிலான தேர்வில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் வருடாந்திர உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 30-ஆம் தேதிக்குள், "அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர் 607 001' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், கும்பகோணத்தில் வருகிற ஆகஸ்ட் 9 முதல் 11-ஆம் தேதி வரை மண்டல அளவிலான தபால்தலைகள் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ட்ற்ற்ல்://ந்ன்க்ஹய்ற்ட்ஹண்ல்ங்ஷ்2018.ண்ய் என்ற வலைப்பதிவில் விண்ணப்பப் படிவம் மற்றும் வழிமுறைகளைக் காணலாம். இதில், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தபால்தலை சேகரிப்பாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்.
எனவே, தபால் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ச.சிவப்பிரகாசம் கேட்டுக்கொண்டார்.