கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆழப்படுத்த வேண்டும் என ஜனநாயக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் மாவட்ட அமைப்புக் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் கே.கந்தசாமி தலைமையில் விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் 2015-16-ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல், உளுந்து, சோளம் ஆகியவற்றுக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.
விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு ஆதரவு விலையை அமல்படுத்திட வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். கடலூர், நாகை மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் கெமிக்கல் மண்டல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளம், குட்டைகளையும் ஆழப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிர்வாகிகள் பி.சக்கரவர்த்தி, எஸ்.வடமலை, ஆர்.ராமலிங்கம், விஜயன், ஏ.அன்பழகன், முத்துக்குமரன், கே.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.