ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 இந்தக் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித் சபை எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து, செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் என்.எஸ்.சந்திரசேகர தீட்சிதர் ரிஷப கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 உத்ஸவ விவரம் வருமாறு: புதன்கிழமை (ஜூன் 13) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சந்திரசேகர சுவாமிகள் வீதிஉலா வருகிறார். இதேபோல, 14-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 15-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 16-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 17-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 18-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 19-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறும்.
 20-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறும். 21-ஆம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.
 பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறும்.
 21-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உத்ஸவம் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com