சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார பயண நிறைவு பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
அரசுப் பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதோடு, அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கடலூர் முதுநகரில் திங்கள்கிழமை தொடகிய பிரசாரப் பயணத்தை மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். இந்த குழுவில் மாவட்டச் செயலர் ஆறுமுகம், மாநிலக் குழு மூசா, நாகராஜன், வாலண்டினா, ஜி.மாதவன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரசார பயணம் கடலூர்,நெல்லிக்குப்பம், பண்ருட்டி,நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி,கீரப்பாளையம் வழியாக வந்து சிதம்பரத்தில் திங்கள்கிழமை இரவு நிறைவடைந்தது.
இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது: எங்களது கட்சி தேர்தலை முன் வைத்து செயல்படும் கட்சியல்ல. மக்களுக்காக போராடும் கட்சி. அந்தப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசினாலும், போராடுபவர்களை பயங்கரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தாலும் அதைப் பெருமையோடு ஏற்றுக்கொண்டு மக்களுக்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்றார்.