கடலூர்
மதுக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடை மீது செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே டாஸ்மாக் மதுக் கடை மீது செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார்.
பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் ஊராட்சியில் ஆர்டிஓ அலுவலகத்தின் பின்புறம் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் திடீரென மதுக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார். கடையின் ஜன்னல் மீது குண்டு விழுந்து தீப்பொறி ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் மதுக் கடையிலிருந்த பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த கண்ணன் (39) என்பவரின் சட்டையில் தீ பிடித்து காயமடைந்தார். இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.