தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தேசிய பசுமைப்படை வரவேற்பு தெரிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.செல்வநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் வாழ்வையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி இயற்கை சீற்றங்களை பிளாஸ்டிக் உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தில் பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. பிளாஸ்டிக்கின் தீமைகளை நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டு செல்லக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை என்ற அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சரவைக்கு கடலூர் மாவட்ட தேசிய பசுமைப் படை, இன்சாட் அறிவியல் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.