சிதம்பரம் வேங்கான்தெரு திருப்பாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் கோயிலில், ஸ்ரீமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த இடம் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமான் திருவாசகம் சொல்ல, ஸ்ரீநடராஜப் பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
மகா குருபூஜை விழாவையொட்டி, இந்தக் கோயிலில் திங்கள்கிழமை சிவ பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. குருபூஜையில் திரளான சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர்.
பின்னர் வடக்குவீதி நடராஜக்ருபா மண்டபத்தில் மாகேஸ்வர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை டிரஸ்டி வை.பசவராஜ் செய்திருந்தார்.