நெய்வேலி அருகே வியாழக்கிழமை லாரியும், சிறிய ரக சரக்கு வாகனமும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
நெய்வேலி, மாற்றுக் குடியிருப்பு செக்டார் பகுதி 3-இல் வசித்து வந்தவர் முருகன். சிறிய ரக சரக்கு வாகன ஓட்டுநர். வியாழக்கிழமை முருகனும், மாற்றுக் குடியிருப்பு, 6-ஆவது பிரதான தெருவைச் சேர்ந்த ரமேஷ் (46) என்பவரும் சிறிய ரக சரக்கு வாகனத்தில் தக்காளி ஏற்றிக்கொண்டு வடலூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். வாகனத்தை முருகன் இயக்கினார்.
வீணங்கன்னி கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, சிறிய ரக சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன், ரமேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தார். ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.