கடல் சீற்றம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கடல் சீற்றமாகக் காணப்படும், பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் 1.5 மீட்டருக்கும் அதிகமாக எழும்பியது. இதனால், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மாவட்டத்திலுள்ள 49 மீனவ கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் மீன்பிடி படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் மீனவர்கள் வலை, படகுகளை பழுதுபார்த்தல், பராமரித்தல் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த இரு நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
இதே நிலை வருகிற 15-ஆம் தேதி வரை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.