புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர், பண்ருட்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
புதுவை மாநிலம், வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாறன் (55). காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவரது தம்பி நாராயணனுக்கும், மூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். தனது தம்பிக்கு ஆதரவாக மாறன் செயல்பட்டு வந்தாராம்.
மூர்த்தியின் மனைவி திலகா, மீன் வியாபாரி. இவரது வியாபாரத்துக்கு மாறனின் ஆதரவாளர்கள் தொந்தரவு செய்தனராம். இந்த நிலையில், மாறன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பெரியகடை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான மூர்த்தி, சுகுமாறன், விக்னேஷ், மாணிக்கம், குணசேகரன், வினோத், கணேஷ், திலகா ஆகியோரை 3 தனிப் படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி நீதிமன்றத்தில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் மூர்த்தி செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.