தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியின்போது காட்டுத் தீயில் சிக்கி பலியான திட்டக்குடியைச் சேர்ந்த இளம்பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ் மகள் சுபா (28). சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நண்பர்களுடன் தேனி மாவட்டம், குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்றிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான திட்டக்குடிக்கு திங்கள்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை அவரது உடலுக்கு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன், எம்எல்ஏக்கள் நாக.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சுபாவின் உடல் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, வெள்ளாற்றங்கரையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.