சாரணர் இயக்கத்தின் ஆளுநர் விருதுக்கான பயிற்சி முகாம், நெய்வேலி வட்டம் 25-இல் உள்ள சாரண மாவட்ட தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நெய்வேலி சாரண மாவட்ட பள்ளிகளில் பயிலும் சாரண, சாரணீயர்கள் ஆளுநர் விருதான ராஜ்ய புரஸ்கார் விருதுக்காகக் கடந்த 3 மாதங்களாகப் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இதன் மூன்றாம் கட்டப் பயிற்சியாக அணிமுறை பயிற்சி, கண்ணிய மன்றக் கூட்டம், கூடாரம் அமைத்தல், முகாமுக்கான கருவிகள் தயார் செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றனர்.
முகாமுக்கு நெய்வேலி சாரண மாவட்டச் செயலர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக என்எல்சி கல்வித் துறை முதன்மை மேலாளரும், சாரண இயக்க ஆணையருமான செந்தில்குமார் பங்கேற்றுப் பேசினார். பின்னர், ஆளுநர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.
சாரண பயிற்றுநர்கள் பார்த்திபன், காமராஜ், சரவணன், ஜெயந்தி, சுமதி, மாலதி, வினித் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்றுநர் பாஸ்கர் நன்றி கூறினார்.