பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பண்ருட்டி, காந்தி சாலையில் பிரசித்திபெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று உலக நன்மை வேண்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாசி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜப் பெருமாள் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
ஏற்பாடுகளை பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.