பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில், வரும் 24-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் நடைபெறும் பேரணியில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பண்ருட்டியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.பரதசக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
வட்டாரத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலர் எம்.பாலமுரளிகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம்.தேவபிரபாகரன் தாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், நடைபெறவுள்ள ஆசிரியர் சிக்கன கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக தமிழக அரசு நடத்த வேண்டும். குறைதீர் நாள்களில் ஆசிரியர்களின் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூரில் மார்ச் 24-ஆம் தேதி நடைபெற உள்ள பேரணியில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வென்றெடுக்க ஆதரவு அளிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டார பொருளாளர் ப.அருண் நன்றி கூறினார்.