சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், வேளாண் மாணவர்களுக்கான "இலக்கியப் போட்டிகள் 2018' தொடக்க விழா வேளாண்புல கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவின் வரவேற்றார். வேளாண்புல முதல்வர் மற்றும் வேளாண் கழகத் தலைவர் மு.ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினார்.
அவர் பேசுகையில், வேளாண் மாணவர்கள் இலக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதன் வாயிலாக தங்களது திறன்களை வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிய முடியும் என்றார்.
வேளாண் கழக துணைத் தலைவர் க.சேகர் சிறப்புரையாற்றுகையில், இலக்கிய போட்டிகள் நமது தேசத் தந்தை காந்தியடிகளின் 150-ஆவது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டு, இன்றைய சூழலில் வேளாண் மாணவர்கள் காந்திய சிந்தனைகளைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் ஆக்கப்பூர்வமானது என்றார்.
வேளாண்கழக பொருளாளர் ஜோ.சாம்ரூபன், இலக்கிய போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் இலக்கிய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடக்க விழாவில் வேளாண்புல இலக்கிய குழுவினர் உருவாக்கிய இலக்கிய மாதிரியை வேளாண்புல முதல்வர் மு.ரவிச்சந்திரன், வேளாண்கழக நிர்வாகிகள் வெளியீட்டனர். இலக்கியக் குழு செயலாளர் இறுதியாண்டு மாணவர் கரு.நிகில் குணால் நன்றி கூறினார். இலக்கிய போட்டிகள் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.