கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் போட்டியிடுவோர் அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பெறலாம் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையர் கடலூரில் புதன்கிழமை தெரிவித்தார்.
கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெறுவது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் மாநில தேர்தல் ஆணையர் மு.இராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் நடத்த அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறை, பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை உள்பட 15 அரசுத் துறைகளின் கீழ் கட்டுப்பாட்டில் முதல் கட்டமாக 584 சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 நிலைகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதல் நிலைக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 26-ஆம் தேதியும், மறுநாள் மனு பரிசீலனையும், வாக்குப்பதிவு ஏப். 2 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி எவ்வித புதிய அறிவிப்புகள் வெளிடக்கூடாது. தேர்தலில் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதலோ, பதவி உயர்வோ அளிக்கக்கூடாது.
இந்த தேர்தலில் போட்டியிட தங்களது வேட்பு மனுக்களை www.coopelection.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடையாது. தமிழகம் முழுவதும் 2.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். முதல்கட்ட தேர்தலில் 1.87 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். குற்ற வழக்குகளில் ஓராண்டுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.
கூட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான கையேட்டினை தேர்தல் ஆணையர் மு.இராஜேந்திரன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், சார்-ஆட்சியர் (பயிற்சி) வி.பி.சிவனருள், தேர்தல் ஆணைய கூடுதல் பதிவாளர் ம.அந்தோணிசாமி ஜான்பீட்டர், கடலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.