சிதம்பரம் ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை (Railway Mail Service) மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வடக்கு ரதவீதி தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வரும் ஆர்.எம்.எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை விருத்தாசலம் ஆர்.எம்.எஸ் அலுவலகத்துடன் இணைக்க தபால்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தபால்களின் பட்டுவாடா கடுமையாக பாதிக்கப்படும்.
குறைந்த செலவில் நிறைந்த சிறந்த சேவை அளித்து வரும் தபால் துறையின் அங்கமான, இதயம் போன்ற அஞ்சல் பிரிப்பகத்தை சிக்கன நடவடிக்கை கருதி மூடுவதால், பொதுமக்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரிதும் பாதிக்கப்படுவர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுத்துறை, தொலைதூரக் கல்வி இயக்ககம் ஆகியவற்றிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சாதாரண தபால்கள், பதிவுத் தபால்கள், விரைவுத் தபால்கள் கொண்டு வரப்பட்டு சிதம்பரம் ஆர்.எம்.எஸ் அஞ்சல் பிரிப்பகத்தில் பிரிக்கப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதேபோன்று, சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களால் தினமும் விபூதி பிரசாதம் பல்வேறு ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான தபால்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தொலைதூரக் கல்வி இயக்கக புத்தகங்கள் அஞ்சல் துறை மூலமாக மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
சிதம்பரம் அஞ்சல் பிரிப்பகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தபால்கள் மறுநாளே கிடைத்து வந்தன. இந்த அலுவலகத்தை மூடினால் தபால்கள் தாமதமாக கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தபால் துறை அதிகாரி தெரிவித்தது:
ஒரு மாவட்டத்துக்கு ஒரு அஞ்சல் பிரிப்பகம்தான் செயல்பட வேண்டும்.
எனவே, சிதம்பரம் அஞ்சல் பிரிப்பகத்தை மூடிவிட்டு, அதனை விருத்தாசலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்க தபால்துறை முடிவு செய்துள்ளது என தபால்துறை அதிகாரி தெரிவித்தார்.