கடலூரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
கடலூர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், நபார்டு வங்கி நிதி உதவியுடன் பல்வேறு கால்நடை வளர்ப்பு பயிற்சிகளை அளித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பேருக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் தொடக்க விழாவில் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் இரா.வாசுதேவன் தலைமை உரை ஆற்றினார்.
மாவட்ட கூட்டுறவு வங்கி நிதி ஆலோசகர் லியாகத் அலிகான் சிறப்புரையாற்றினார். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ப.சிலம்பரசன் வரவேற்க, உதவிப் பேராசிரியர் பி.முரளி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உழவர் பயிற்சி மைய தலைவர் பி.வீரமணி, நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றிய முன்னுரை, நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக் கோழி குஞ்சு மேலாண்மை பற்றி விளக்கினார்.
மேலும், பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு புத்தகம், பயிற்சி கையேடு, பேனா அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நாட்டுக் கோழிக்கான தீவனங்கள் தயாரிக்கும் மற்றும் அளிக்கும் முறைகள், நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களும், தடுக்கும் முறைகள், இனப்பெருக்க மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றி விளக்குகின்றனர்.
மூன்றாம் நாளில் முன்னோடி நாட்டுக்கோழி பண்ணையாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
மேலும், பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.