வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்த மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து பெறும் வகையில் உத்தரவாதம் அளித்தல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் காவல் ஆய்வாளர் பாண்டியன், அம்பிகா சர்க்கரை ஆலை உதவிப் பொதுமேலாளர் ஜானகிராமன், உதவி மேலாளர் கணேஷ், வனத்துறை அலுவலர் சரவணகுமார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடந்து நீடிக்கும் எனவும், வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் குறித்து தணிக்கை செய்து உரிய நஷ்டஈடு வழங்குதல், கரும்பு நிலுவைத் தொகையை விரைவாக பெற்றுத் தரவும், எடைச்செருவாய் பகுதியில் நஞ்சை மற்றும் மானாவாரி பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆணையைப் பெற்று வழங்குவது எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையேற்று சங்கத்தினர் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், நேரு, புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.