அரசு நிலத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம் அடுத்த பெரம்பலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனராம். இந்த ஆக்கிரமிப்பை அகற்றிட வலியுறுத்தி வட்டாட்சியர், கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, கிராமமக்கள் திரளானோர் வியாழக்கிழமை விருத்தாசலத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர் பொதுமக்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் சந்தோஷிணி சந்திராவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலம் 76 சென்ட் உள்ளது. கிராமத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், கிராம மக்களின் பல்வேறு பயன்பாட்டுக்கும் அந்த இடம் தேவைப்படுகிறது. எனவே, அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், இடத்தை நேரில் பார்வையிட்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.