மீனவர் கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, கடற்கரையோர காவல் நிலையங்களுக்கு கூடுதல் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமித்துள்ளார்.
கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவர் கிராமத்தினரிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக பிரமுகர் க.பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கடலூர் துறைமுகம் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம் காவல் நிலையங்களுக்கு கூடுதல் காவலர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவில், வடலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எம்.கதிரவனை தேவனாம்பட்டினம் காவல் நிலையத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். மேலும், பல்வேறு காவல் நிலையங்களிலிருந்தும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 பேரை கடலூர் துறைமுகம் காவல் நிலையத்துக்கும், 8 பேரை தேவனாம்பட்டினம் காவல் நிலையத்துக்கும் மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் உடனடியாக அந்தந்தப் பகுதியில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.