அரசுத் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி வழங்கக் கோரி, நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூரை வீட்டில் வசித்து வரும் இவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரி, ஊராட்சி செயலரிடம் மனு அளித்தாராம். ஆனால், நீண்ட நாள்களாகியும் அவரது மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததோடு, அதுதொடர்பாக கேள்வி எழுப்பினால் அவமதித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சந்திரசேகர் தனது மனைவி தேவகி, மகன்கள் சுரேஷ், சதீஷ், நவீன் ஆகியோருடன் வியாழக்கிழமை நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தார். வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கக் கோரி, தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலிலும், தனது குடும்பத்தினர் உடலிலும் ஊற்றி தீ வைக்க முயன்றார்.
அப்போது, அங்கிருந்த அலுவலர்கள் இதை தடுத்தனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்த வேப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.