கடலூர் மாவட்டத்தில் 11 நீர்நிலைகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுவதற்கு வனத் துறையால் விடப்பட்ட ஏலத்தில் ரூ.78.88 லட்சத்துக்கு மரங்கள் விலைபோகின.
மாவட்டத்தில் விருத்தாசலம் வனச் சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்கள், தைல மரங்களை வெட்டுவதற்கான ஏலம் கடலூரில் உள்ள மாவட்ட வனச் சரகர் அலுலவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் ஏ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் யோகேஷ்சிங் முன்னிலை வகித்து ஏலப் பணிகளை பார்வையிட்டார்.
இதில், காட்டுமன்னார்கோவில் ஒன்றியம், கொண்டசமுத்திரத்திலுள்ள தைல மரம் மற்றும் பா.புத்தூர் வீராணம் ஏரியில் கருவேல் மரம் ஏலம் விடப்பட்டது. இதேபோல மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் மா.புடையூர், கொரக்கை, அடரி, திட்டக்குடி ஒன்றியத்தில் சிறுமுலை, பாளையம், கீழ்ச்செருவாய், நல்லூர் ஒன்றியத்தில் நாரையூர் பகுதியில் உள்ள கருவேல் மரங்கள் ஏலம் விடப்பட்டன. மொத்தம் 817.25 ஏக்கரில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு இந்த ஏலம் நடைபெற்றது. பதிவு செய்யப்பட்ட 34 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்று ஏலம் கேட்டனர். மொத்தம் ரூ.78.88 லட்சத்துக்கு மரங்கள் ஏலம் போகின. அதிகபட்சமாக கொரக்கை பகுதியில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் உள்ள கருவேல மரங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறையே ரூ.25 லட்சம், ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போகின.
ஏலம் விடப்பட்ட மரங்களை ஒப்பந்ததாரர்கள் வரும் ஜனவரி மாதம் முதல் ஓராண்டுக்குள் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், சுமார் 30 ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்ட மரங்கள் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்த ஏலத் தொகையில் பெறப்படும் பணத்தில் பெரும்பகுதி அந்தந்த ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படுமென தகவல்
தெரிவிக்கப்பட்டது.