ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்னா
கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிடுதல், ஓய்வூதியர் இறந்தால் ஈமச் சடங்கு நடத்திட ரூ.25,000 வழங்க வேண்டும், ஊதியக் குழு 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனைவரையும் இணைத்திட வேண்டும், அந்தியோதயா ரயில் கடலூரில் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடலூரில் தர்னாவில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் பி.குமாரசாமி தலைமை வகித்தார். செயலர் ஆர்.மனோகரன் கோரிக்கை விளக்கவுரையும், குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலர் மு.மருதவாணன் தொடக்கவுரையும் ஆற்றினர்.
பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளான கோ.பழனி, பி.வெங்கடேசன், ஜி.வீராசாமி, டி.கண்ணன், ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலர் பி.புருஷோத்தமன் நிறைவுரை ஆற்றினார். முன்னதாக, நிர்வாகி கருணாகரன் வரவேற்க, சீனிவாசன் நன்றி கூறினார்.
இந்தப் போராட்டத்தில், அரசு ஓய்வூதியர்கள், வங்கித் துறை, தொலைத் தொடர்புத் துறை, மின்சார வாரியம், போக்குவரத்து, குடிநீர் வடிகால் வாரியம், பள்ளி, கல்லூரி ஓய்வு பெற்றோர், ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்கம், வருவாய்த் துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கம், ஈபிஎப் ஓய்வூதியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.