புதுச்சேரியிலிருந்து சாராயம் கடத்தி வந்தவர் கடலூரில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கி.உதயகுமார் தலைமையில் காவலர்கள் எஸ்.என்.சாவடி பகுதியில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக மொபெட்டில் 4 சாக்கு மூட்டைகளில் சாராயம் கடத்தி வந்தவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுவை, பாகூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பாலாஜி (24) எனத் தெரிய வந்தது.
இவர், புதுச்சேரியிலிருந்து கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கத்துக்கு 200 லிட்டர் சாராயம் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸார், கடத்தல் சாராயம், மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.