கடலூரில் நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் நகராட்சி அலுவலகம் சென்னை - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி கடலூர் பாரதி சாலை என அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பகுதியை விரிவாக்கம் செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்காக, சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டைகளை அகற்றிவிட்டு, புதியதாக தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின்போது நகராட்சி அலுவலகம் முன்புறம் ஏற்கெனவே உள்ள பாதையை நெடுஞ்சாலைத் துறையினர் மூடும் முயற்சியில் ஈடுபட்டன
ராம்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நகராட்சி ஊழியர்கள், தடுப்புச் சுவர் அமைக்கும் பணியிடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அதில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜொ.லாமேக், தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஏற்கெனவே இருந்த பாதையை மூடாமல் அதில் போதுமான இடைவெளி ஏற்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.