கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வானது இரண்டாவது நாளாக வியாழக்கிழமை கடலூர் நகராட்சியில் தொடர்ந்தது.
அன்றாட அலுவல் பணிகள், திட்டம் தொடர்பான பணிகளின் முன்னேற்றம், வரி வசூல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலூர் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களில் முன்பணம் பெற்று இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திரளானோர் முன்பணம் செலுத்தாததால் இணைப்பு வழங்கிவிட்டு தவணை முறையில் முன்பணம் செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இந்தத் திட்டத்தில் தற்போது 1,500 பேர் புதைச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர்.
நகராட்சிகளில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து பெற வேண்டுமென சுகாதாரத் துறை, துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியில் தீவிரம் காட்ட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது மண்டல பொறியாளர் முருகேசன், நகராட்சி ஆணையர் (பொ) ராமசாமி, பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.