தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு, நுகர்வோர் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் பசுமைச் செயல்பாடு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி, விவசாயிகள், மீனவர்களுக்கான சமுதாயப் பகிர்வு கருத்தரங்கம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொது மேலாளர் ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்து கருத்தரங்கை தொடக்கி வைத்தார். நுகர்வோர் கூட்டமைப்பு திட்ட இயக்குநர் டி.அருள்செல்வம் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார். குடிமைப் பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர் எம்.எஸ்.ஜெயசெல்வி வாழ்த்துரையும், ஓய்வுபெற்ற வேளாண்மை துணை இயக்குநர் பெ.ஹரிதாஸ், தேசிய மீனவர் பேரவை உறுப்பினர் ராமஜெயம், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் எஸ்.கிருஷ்ணராஜ் ஆகியோர் கருத்துரையும் வழங்கினர்.
மாவட்ட நபார்டு உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் வரவேற்க, அன்னை தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்ட தலைவர் எம்.சேகர் நன்றி கூறினார். கருத்தரங்கில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், மீனவர்கள் பங்கேற்றனர்.