ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் எஸ்.ராசமோகன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பொருளாளர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பி.கலியபெருமாள், மாவட்டச் செயலர் சி.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கெளரவத் தலைவர் ராம.முத்துக்குமரனார் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.
கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் செயல்படுத்தக் கூடாது. கடலூர் பெருநகராட்சிக்கு உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் பொதுச் செயலர் பி.ராமகிருஷ்ணன், சட்ட இயக்குநர் டி.முருகன், துணைத் தலைவர் சு.தமிழ்மணி உள்ளிட்டோர் பேசினர். மாநில துணைத் தலைவர் எஸ்.மோகன் நன்றி கூறினார்.