கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவத் துறையில் காலியாக உள்ள 350-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 5 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து வட்ட மருத்துவமனைகள், துணை இயக்குநர் அலுவலகங்கள், மேம்படுத்தப்பட்ட மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும்.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தினர் கடலூரில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் எஸ்.சத்தியராஜ் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் என்.ஜனார்தனன், மாநில பொருளாளர் ஏ.விஸ்வேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை ஆதரித்து பேசினர்.
மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.செந்தில்குமார், ஜி.சரஸ்வதி, ஜி.பொற்செழியன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.