விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மங்கலம்பேட்டை காவல் துறையினர் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு மங்கலம்பேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட பள்ளிப்பட்டு, கர்னத்தம், எம்.அகரம், எடைச்சித்தூர், காட்டுப்பரூர், எம்.பரூர், எம்.பட்டி, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், விஜயமாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் வருகிற 17-ஆம் தேதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளன.
இதனை முன்னிட்டு, மங்கலம்பேட்டை காவல் துறை சார்பில், மங்கலம்பேட்டையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அனைத்துக் கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வல விழாக் குழு தலைவர் மணிகண்டன் பஜ்ரங்கி, செயலர் தமிழ்மணி, கீழவீதி ஜாமிஆ பள்ளிவாசல் தலைவர் அப்துல் கனி, காரியஸ்தர் அப்துல் ரஹ்மான், ஐக்கிய ஜமாஅத் நகர தலைவர் அப்துல் பாரி, பாஜக விருத்தாசலம் தொகுதி அமைப்பாளர் ராஜேந்திரன், நகர தலைவர் அனில்குமார், மாவட்ட வர்த்தகர் அணி புருஷோத்தமன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலர் இக்பால், தமுமுக பிரமுகர்கள் அசன் முஹம்மது, சாதிக் அலி, அபுபக்கர், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலர் அன்வர், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலர் ஹஜ்ஜி முஹம்மது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர தலைவர் அப்துல் ரவூப், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் கமலக்கண்ணன், பாப்புலர் ப்ரண்ட் பிரமுகர் அபுல் ஹசன், பாமக பிரமுகர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஏற்படுத்தியுள்ள நடைமுறையை வழக்கம்போல கடைப்பிடிப்பது என்றும், விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. உதவி ஆய்வாளர் செல்வம் நன்றி கூறினார்.