கடலூரில் 5 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்றச் சங்கம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்றவர்களில் 5 ஜோடிகள் திருமணம் செய்துக்கொள்ள முன்வந்தனர். அவர்களுக்கான திருமண நிகழ்ச்சி கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருணம் செய்து வைத்தார். மேலும், அவர்களுக்கு தலா 4 கிராம் மதிப்பிலான தங்கத்தை வழங்கினார்.
மணமக்களை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், அதிமுக நகரச் செயலர் ஆர்.குமரன், எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
இந்த நிகழ்வில், வேலூர் மாவட்டத்திலிருந்து 3 ஜோடிகள், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து தலா ஒரு ஜோடியினரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு சமையல் பாத்திரங்கள், சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் தீபக், பொதுச் செயலர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.