ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் வருகிற 26-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க வேண்டிய ஆளுநர், அதை மத்திய அரக்கு அனுப்பி வைத்துள்ளார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. இதை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, ஆளுநர் சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி, வருகிற 26-ஆம் தேதி மாலை 4 மணியளவில் தவாக சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென தி.வேல்முருகன் அதில் கேட்டுகொண்டுள்ளார்.