விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விருத்தாசலத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் விநாயகர் சிலை வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கோயில் கலையரங்கத்தில் சித்தி விநாயகர் இறைபணி மன்றம், மாஸ்டர் அகாதெமி சார்பில், பாபு, வகிதா பானு குழுவினரின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. விநாயகர் பக்தி பாடலுக்கு குழுவினர் காலை முதல் இரவு வரை பரத நாட்டியமாடினர். திரளானோர் கண்டு களித்தனர். நாட்டியாஞ்சலி நிகழ்த்திய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, கோயில் உள்பிரகாரத்திலுள்ள ஆழத்து பிள்ளையாருக்கு சந்தனம் சார்த்தல், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.