காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலர் ஜி.மாதவன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஏழுமலை, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம், பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைச் செயலர் மூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முற்றுகைப் போராட்டத்தில், கடலூர், நாகை மாவட்டங்களில் 3 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியரிடம் அளித்தனர்.
மேலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக வருகிற 18-ஆம் தேதி சிதம்பரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.