குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியது.
இந்தச் சங்கத்தின் கடலூர் மைய மாதாந்திர சிறப்புக் கூட்டம் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுச் செயலர் பாபு.சுப்ரமணியன் சென்ற கூட்ட நடவடிக்கையையும், பொருளாளர் இரா.திருநாவுக்கரசு சங்க வரவு-செலவு கணக்கையும் வாசித்து ஒப்புதல் பெற்றனர். கூட்டத்தில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பிடித்த தொகையைக் குறைக்க வேண்டும். பணியிலிருக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருத்துவ சலுகைகளையும் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசின் 7-ஆவது ஊதியக் குழுவின் பணப் பலன்களை ஓய்வூதியர்கள் பெறும் வகையில் திருந்திய அரசாணை வெளியிட வேண்டும். கருவூலம் மூலமாக அடையாள அட்டை வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவர்கள் த.சண்முகசுந்தரம், ஆர்.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் எஸ்.அன்பழகன், ஆர்.திருநாராயணன், ஆ.ஜெயராமன், ஆர்.தன்ராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக செயற்குழு உறுப்பினர் பி.செல்லமுத்து வரவேற்றார். நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் நன்றி கூறினார்.